திருவாரூர் சரவணன்
கட்டுரை
29–03–2019
வலைதளங்களில்
சமீப காலமாகவே யாரும் திண்ணை வைத்து வீடு கட்டுவதில்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவும்
மறுக்கிறார்கள் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இது உண்மைதான்.
திண்ணைகள் காணாமல் போவதற்கு முக்கிய காரணம் நிலத்தின் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டதும்,
ஒரு திண்ணை இருக்கும் இடத்தினை படுக்கை அறையாகவே கட்டி விடலாம் என்ற மனப்போக்கும் அடிப்படையான
காரணங்கள் என்றாலும் இந்த எண்ணங்கள் மக்கள் மனதில் ஒரே நாளில் பொருளாதார காரணங்களால்
மட்டும் ஏற்பட்டதாக கருத முடியாது.
அப்படி என்னால்
இந்த நிலைக்கு யார் காரணம் என்று பார்த்தால் இதற்கெல்லாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல
முடியாது. பொதுமக்கள்தான் காரணம். வேண்டுமானால் சமூகவிரோதிகள் என்று இனம் பிரித்து
சொல்லலாம்.
முன்பெல்லாம்
திண்ணைகளில் பலரும் கூடி பேசினாலும் அது ஏதோ வெட்டிப்பேச்சு என்ற அளவில்தான் இருக்கும்.
உண்மையில் வழிப்போக்கர்கள், அடுத்தடுத்த வீடுகளில் ஏதாவது சுப நிகழ்வு நடைபெறும்போது
சம்மந்தப்பட்ட வீடுகளின் விருந்தினர்கள் அங்கே இடம் போதாமல் எதிர்வீடுகள், அக்கம் பக்கத்து
வீடுகளில் உள்ள திண்ணைகளில் தஞ்சமடைந்தார்கள்.
1990 ஆம் ஆண்டுக்கு
முன்பு வரை ஏன், தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழில் துவங்கிய
1993ஆம் ஆண்டு வரை இந்த நிலைதான்.
பிறகுதான் தொலைக்காட்சிகளில்
சென்னை தொலைக்காட்சி அலைவரிசை 1 என்ற காட்சி மாறியது. வீடுகளின் முகப்பும் மாறத் தொடங்கியது.
யாரும் மாலை
வேளைகளிலோ, பகல் நேரத்தில் தலைச்சுமை வியாபாரிகளுடனோ அமர்ந்து உரையாடும் போக்கு குறையத்
தொடங்கியது. அதற்கு தொலைக்காட்சி மட்டும் காரணமில்லை. உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு
தொழில்கள், கடைகள் பெருகியதன் விளைவும் இதனால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட
மாற்றங்களும் முக்கிய காரணம்.
வீட்டைச் சேர்ந்தவர்களும்
அக்கம்பக்கத்தினரும் பயன்படுத்தாமல் விட்ட திண்ணைகளை வேறு ஒரு பகுதியினர் வேறு மாதிரியாக
பயன்படுத்த தொடங்கினார்கள்.
ஆம். முன்பெல்லாம்
ஒருவன் குடிக்கிறான் என்றால் அவனை மிகவும் மட்டமாக பார்த்து, ஏளனமாக மதித்த காலம் காணாமல்
போய், யாராவது குடிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களை மனநோயாளியாக இருப்பார்களோ
என்று சந்தேகிக்கும் காலம் தொடங்கியது.
இதனால் ஊருக்கு
ஒதுக்குப்புறம், புதர் மறைவு, சுடுகாட்டு மண்டபம் என்று பதுங்கி பதுங்கி குடித்தவர்கள்
எங்கே அமர்ந்து கொள்ள வசதியான இடம் இருக்கிறதோ அது சாலை ஓரம், பள்ளி வளாகம், திண்ணை,
மாடிப்படி என்று எந்த வடிவில் இருந்தாலும் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில், துணை
உணவு இருந்த பொட்டலங்கள் என்று குப்பைகளை போடுவதுடன் சமயத்தில் வாந்தி எடுத்து வைத்துவிட்டும்
செல்லத் தொடங்கினார்கள்.
இதுதான் திண்ணைகள்
காணாமல் போவதற்கு முக்கியமான காரணம்.
இப்போது குற்றவாளிகள்
அதிகரித்திருப்பதையும் மறுக்க முடியாது. முகவரி கேட்டு வருபவர்களும், குடிக்க தண்ணீர்
கேட்டு வாசலில் அமர்பவர்களும் கூட வீட்டில் உள்ள பெண்களையும் வயதானவர்களையும் தாக்கி
விட்டு (சமயங்களில் உயிரையும் போக்கிவிட்டு) கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
நான் நல்லவனாக
இருக்க தயார்தான். ஆனால் அந்த மனநிலையை பயன்படுத்தி என்னை அழித்து விட்டு ஒருவன் என்
செல்வத்தை கொள்ளையடித்துச் செல்ல தயாராக இருக்கும்போது நான் எப்படி திண்ணை வைத்து வீடு
கட்டுவதையும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதையும் அச்சமின்றி செய்ய முடியும்?
ஆனால் வேறொரு
விசயம் செய்யலாம்.
வீட்டு வாசலில்
மரம் வளர்த்து, அதன் நிழலில் ஒரு பானையில் குடிக்க தண்ணீர் வைத்து விடலாம். ஆனால் மதியம்
12 மணிக்கு மதுக்கடைகள் திறந்தாலும், காலை 6 மணிக்கே கள்ள மார்க்கெட்டில் தாங்கள் தேடுவது
கிடைக்கிறதா என்று அலையும் நபர்கள் இப்படிப்பட்ட இடத்தை 24 மணி நேரமும் திறந்த வெளி
மது அருந்தும் கூடமாக பயன்படுத்தும் ஆபத்தும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
முன்பெல்லாம்
குற்றம் செய்வது மிகவும் ஆபத்தான விசயமாக இருந்தது. ஆனால் இப்போது நாலு பேருக்கு நல்லது
செய்ய வேண்டும் என்று செயல்படுவதுதான் சிக்கல் நிறைந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
இது போன்ற நடைமுறை
சிரமங்களை தாண்டியும் சமூகத்துக்கு உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையும்,
செயல்பாடுகளும்தான் உலகம் இந்த அளவுக்கு நல்லவிதமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கும்
அச்சாணி.
No comments:
Post a Comment