நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 28, 2019

சோலைமலை வார இதழ் 28-06-2019

சோலைமலை வார இதழ் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.









சோலைமலை வார இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

திருவாரூரில் திருவிழா - 2


(2010ல் எழுதப்பட்ட ஏழு வார தொடர்கதை)
அத்தியாயம் – 2
மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருவாரூரில் இருந்த அண்ணாசிலைக்கு மாலை போட இறங்கியதும் "வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..." என்று வெற்றி மிகப்பெரிய குரலில் கோஷம் போட்டதும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களும் சாலையில் போய்க்கொண்டு இருந்த பொதுமக்களும் ஸ்தம்பித்துப்போனார்கள்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார். நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..." என்று மீண்டும் கோஷம் போட்ட வெற்றி, இன்ஸ்பெக்டர் அருகில் சென்று
"சார்... நம்ம முன்னாள் முதலமைச்சரே இந்த ஊர்ல படிச்சு வளர்ந்தவர்தானே. ஆசைப்படுறது தப்பு இல்லை. ஆனா அதை நேர்மையான வழியில அடைய முயற்சி செய்யணும்....
இப்படி நாங்க பேசுறதை நீங்க கேட்டுகிட்டு இருக்க காரணம் என்ன? மாணவர்கள் அப்படின்னுங்குற ஒரே தகுதிதான். இந்த சமயத்துல இந்த மாதிரி எல்லாம் வாழ்ந்து பார்த்துடணும். படிப்பு முடிஞ்சுட்டா அப்புறம் நாங்க உலகத்தோட எந்த மூலையில என்ன செஞ்சுகிட்டு கிடப்போம்னு யாருக்கு தெரியும்?...நீங்களும் உங்களோட மாணவர் பருவத்தை மலரும் நினைவுகளா நினைச்சுப்பார்த்து எங்களை வாழ்த்துங்க சார்..."என்றான்.
இப்போது இன்ஸ்பெக்டர் முகத்தில் புன்னகை. "நல்லா பேசுற தம்பி... யாருக்கும் துன்பம் செய்யாம உங்க மாணவர் பருவத்தை கொண்டாடுங்க..." என்று அவர் பச்சைக்கொடி காட்டி விடவே, இப்போது வெற்றியின் குரலில் மேலும் உற்சாகம்.
அதன்பிறகு இரண்டு நாட்கள் திருவாரூர் முழுவதும் இந்த மாணவர்களைப் பற்றிய பேச்சுதான்.
***
அடுத்த நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் சாமிநாதன், "என்னப்பா, வெட்டி... நேத்து ஒரே கலக்கலாமே... அதை எல்லாம் நல்லாவே செய்யுற... எழுந்து அக்கவுண்டன்சியில உள்ள கோல்டன் ரூல் என்னன்னு சொல்லு." என்றார்.
"கோல்டன் ரூலா? அப்படின்னா என்ன சார்..." இதைக்கேட்டதும் மாணவிகள் எல்லாரும் சிரித்தார்கள்.
அதைக் கவனித்த வெற்றி, 'அப்பாடா...பசங்கள்ல ஒருத்தனுக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது போலிருக்கு...கம்பெனி கொடுக்க இருக்கானுங்க.' என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.
"வெட்டி...கொரங்கு சேட்டை எல்லாம் பண்ணினா கூடப்படிக்கிற பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிரிப்பாங்கதான். ஆனா படிப்புலயும் பெரிய ஆளா இருந்தாதான் இவங்க கிட்டயே மதிப்பு இருக்கும். நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்கிட்ட எதிர் கேள்வி கேட்டு ஹீரோவாயிடலாம்னு பார்க்குறியா?
ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."என்று முறைத்தார்.
"உங்களை காமெடி பீசா நினைச்சதா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க சார்.உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. நீங்களே சொல்லிடுங்களேன்." என்ற வெற்றியை வகுப்பறை மொத்தமும் பரிதாபமாக பார்த்தது.
"அக்கவுண்ட்ல உள்ள அடிப்படை பாடம் தெரியாம நீ பிளஸ்டூவைத் தாண்டி காலேஜீக்கும் வந்துட்ட. இதுதான் நேரக்கொடுமை. அந்த ஆறு ரூல் ஒழுங்கா புரிஞ்சா உலகத்துல உள்ள எந்த நிறுவனத்து கணக்கையும் சரியா செஞ்சுடலாம். இதை உனக்கு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுக்கலையா?" என்று சாமிநாதன் கேட்டபோது அவரது குரலில் முன்பிருந்த கடுமை இல்லை.
"சார் நான் பத்தாவதுல ரெண்டு அட்டை. பிரைவேட்டா அதை எழுதி பாஸ் பண்ணினதும் பிளஸ்டூவும் இப்படியே பிரைவேட்டாதான் முடிச்சேன். நீங்க சொன்னது பதினோராம் வகுப்புல இருந்துருக்கலாம். நான் நேரடியா பிளஸ்டூ சார்."
2010ஆம் ஆண்டு இந்த கதையை எழுதிய போது
ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாக
வலைப்பூவில் வெளியிட்டபோது
தினம் ஒரு போஸ்டராக வடிவமைத்திருந்தேன்
"அது சரி...இனிமேலாச்சும் இது மாதிரி அடிப்படை விஷயங்களை ஒழுங்கா தெரிஞ்சுக்க வழி பாரு. அடிப்படை விதிகள் தெரியாம ஒருத்தன் ஒரு பாடம் படிச்சு கல்லூரி வரை வர்ற. நம்ம கல்வி முறையோட யோக்கியதை இப்படி இருக்கு.உன்னைக் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது." என்ற சாமி நாதன் வெற்றியை உட்கார சொன்னார்.
இப்போது மாணவிகளில் பலர் வெற்றியைப் பார்த்த பார்வையில் ஒருவித ஏளனம் தெரிந்தது. திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து மிக அதிக மதிப்பெண்களுடன் இருபத்து எட்டு பேர் சேர்ந்திருந்தார்கள். மாணவர்களில் பலர் வெளியூர் பள்ளியில் படித்து வந்தவர்கள் என்பதால் இவனைப் பார்த்த பார்வையில் தவறாக எதுவும் இல்லை.
வெற்றி, மாணவிகளிடம் சென்று, "பஸ்சுல உட்கார்ந்தா என்ன, புட்போர்டு அடிச்சா என்ன? திருச்சி போற பஸ்சுல ஏறுனா சீட்டுல உட்கார்ந்து இருக்குறவங்களை மட்டும் சென்னைக்கா அழைச்சுட்டு போகப்போறாங்க? முதல்ல மனுஷனை மதிக்க கத்துக்குங்க..." என்று சீறினான்.
"ஹலோ...உங்க கிட்ட நாங்க எதாவது சொன்னோமா?... சும்மா கத்தாம போய் உட்காருங்க..."என்று ஒரு மாணவி பதிலளிக்கவும்
 அவள் தோழிகள், "பேசாம இருடி..."என்றார்கள்.
"மிஸ் சந்தியா...கொஞ்சம் அடங்குங்க...நீங்க நூறுக்கு நூத்திப் பத்து மார்க் எடுத்தா அதை பத்திரமா நீங்களே வெச்சுக்குங்க. யார் கேட்டா? எல்லாரும் எல்லா வேலையும் செஞ்சுட முடியாது. அதை மனசுல வெச்சுகிட்டா போதும்." என்று அங்கிருந்து தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.
"சந்தியா...அவன் நம்ம புரொபசரையே மடக்கி பதில் சொல்ல விடாம திணற வெச்சுட்டான். அதனால இப்ப அவனை யாரும் கண்டுக்குறது இல்லை. ஆனா ஒரு வெறியோடதான் இருப்பாங்க. என்னைக்காவது வசமா சிக்கப்போறான் பாரு... அப்ப நாம வேடிக்கை பார்ப்போம். இப்ப நம்ம வேலையை மட்டும் பார்க்குறது நல்லது." என்று அவள் தோழி ஜெயந்தி சொல்லவும் சந்தியா அமைதியானாள்.
***
ஐம்பது இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தாலும் மூன்று முறை வெயிட்டிங் லிஸ்ட் போட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக அந்த இடத்தைக் கைப்பற்றியவன்தான் வெற்றி. அவன் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த சில தினங்களிலேயே பேராசிரியர்கள் யாரும் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.
இதற்குக் காரணமும் ஒரு பேராசிரியர்தான். புள்ளியியல் பாடம் நடத்த வந்த அவர், சரியான டேட்டா, தவறான டேட்டா என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னார். அதில் தவறான விஷயத்தை சொல்லிவிட, வெற்றி இந்த வார்த்தைகளை வைத்தே அந்த பேராசிரியரை மடக்கி விட்டான். அதிலிருந்து எல்லா பேராசிரியர்களும் எச்சரிக்கையாகி விட்டார்கள்.
அந்த பேராசிரியர், ஒரு நாள், "ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர்கிட்ட நேரடியா நீங்க என்ன சோப் போட்டு குளிக்கிறீங்க அப்படின்னு கேட்டு தகவல் சேகரிக்கிறோம்னா அதுக்குப் பேர்தான் டேட்டா கலெக்ஷன். அதாவது தகவல் சேகரிப்பு.
அதுல மக்கள் உண்மையான தகவலை சொன்னா அதுக்குப்பேர் ரைட் டேட்டா.ஐ மீன் சரியான தகவல். இதுல நிறைய பேர் தப்பான தகவல் சொல்லவும் வாய்ப்பு இருக்கு." என்றவர் வெற்றிக்கு அருகில் அமர்ந்திருந்த ராம்குமாரை எழுந்து நிற்கச் சொன்னார்.
தயக்கத்துடனேயே அவன் எழுந்தான்.
"ஒண்ணும் பயப்படாத...இவனைக்கவனிங்க... இவன் இருக்குறதைப் பார்த்தா குளிக்கவே மாட்டான்னு நினைக்குறேன். ஆனா இவன் கிட்ட சர்வே எடுக்கும்போது லக்ஸ் சோப் போட்டுக் குளிக்கிறேன்னு சொல்லிட்டான்னா அப்பதான் ரைட் டேட்டா ராங் டேட்டாவாயிடுது." என்று பேராசிரியர் சொன்னதும் வெற்றியைத் தவிர அனைவரும் சிரித்தார்கள்.
ராம்குமாரின் கண்கள் கலங்கி விட்டன.
'இந்த ஆள் ரத்த சோகை புடிச்சு வெளுத்துருக்காரு.அந்த திமிருதான் இப்படி பேச சொல்லுது.' என்று முனகினான்.
"ஏய் வெற்றி...என்ன வெட்டித்தனமா எதோ பேசிகிட்டு இருக்க..."
"ஒண்ணும் இல்ல சார்."
"நான் பார்த்தேன். எழுந்து நில்லு."
வெற்றி எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.
"நீ எதுவோ சொன்ன.நான் திட்ட மாட்டேன். நீ என்ன பேசினன்னு மரியாதையா சொல்லிடு."
"நாங்க எதுவும் சொல்லலீங்க சார்."
"நீ மட்டும்தானடா பேசின... இப்ப நாங்க எதுவும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்."
"நீங்க மரியாதையா பேசுன்னு சொன்னதை நான் மதிக்கிறேன்னு அர்த்தம்." இதைக் கேட்டு மற்ற மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து சிரித்துவிட,  பேராசிரியர் கோபமானார்.
"சரி...நீ என்ன சோப் போட்டு குளிக்கிற?"
"அது கொஞ்சம் காஸ்ட்லியான சோப்பு சார்."
"அதுதான் என்னதுன்னு சொல்லு. பேர் இருக்குல்ல?"
பேராசிரியரின் இந்தக் கேள்விக்கு வெற்றி விடை சொன்னதும் வகுப்பறையில் இருந்த வெற்றியையும் பேராசிரியரையும் தவிர மற்ற அனைவரும் சிரித்தார்கள். பேராசிரியரே ஒருசில நொடிகள் தடுமாறித்தான் போனார்.
–தொடரும்...

வாழ்வு கொடுத்த உண்மை!


சில தரகர்கள் தங்களின் கமிஷனுக்காக வாயில் வந்த பொய்களை எல்லாம் அள்ளி விடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்காக நான் வேலை விஷயமாக மதுரையில் தங்கியிருந்த போது அந்தப் பகுதி இளைஞனுக்கு பெண் பார்த்தனர்.

சொந்தமாக லோடு வேன் இருக்கிறது, பிளஸ்டூ வரை படித்திருக்கிறான்...என்றெல்லாம் பெண் வீட்டாரிடம் பொய் சொல்லியிருக்கிறார் தரகர்.


இந்தப் பொய்களை அப்படியே, மெயின்டெயின்  செய்ய மாப்பிள்ளையின் பெற்றோரும் முடிவு செய்து விட்டார்கள். ஏற்பாடுகளும் நிச்சயதார்த்தம் வரை போய் விட்டது.
தரகர் சொன்ன பொய்கள் மாப்பிள்ளைக்குத் தெரிந்ததும் நேராக பெண்ணின் வீட்டிற்கே போய், நான் பத்தாவது பெயில். சம்பளத்திற்குதான் லோடு வேன் ஓட்டுகிறேன். என் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. சில ஆண்டுகளில் சொந்தமாக வண்டி வாங்கிவிடுவேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொடுங்கள்!...என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.
மாப்பிள்ளை உண்மையை சொன்னதால் பெண் வீட்டில் அனைவருக்கும் மனப்பூர்வ சம்மதம். திருமணம் நல்லபடியாக நடந்தது. சமீபத்தில்தான் அந்த இளைஞர் பழைய சின்னயானை ஒன்றை சிறிது தொகை கடனுடன் வாங்கியிருக்கிறார்.
ஆனால் உலக வரலாறு மிகவும் முக்கியம்பெண் வீட்டார் சம்மதமும் சரி, மாப்பிள்ளை மினி லோடு வேன் வாங்கியதும் சரி.
இது விதிவிலக்குதான் நண்பர்களே...
பழைய பேப்பர் என்ற குறிப்புகள் இருக்கும் பதிவுகள் அனைத்தும்
சில பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை -
இங்கே மீள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உண்மையில் பொருளாதார பாதுகாப்பை மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள். இதை முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது பிறந்த குழந்தையிலிருந்து இருபத்தைந்து வயது வாலிபன் என்ற அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்ப சொத்து, பார்க்கும் பணி என்ற பல காரணங்கள் இருக்கும்.
பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் அந்த அளவில் இருந்து படிப்படியான வளர்ச்சிதான் பெரும்பாலும் சாத்தியமாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் மிகப்பெரிய ஆடம்பரத்துக்கு உடனடியாக ஆசைப்படுவதால்தான் தொண்ணூறு சதவீதப் பிரச்சனை.
ஒரு வயதுக் குழந்தை திடீரென இருபத்தைந்து வயது வாலிபனாவது சாத்தியமா. முடியாது. ஆனால் உரிய காலகட்டத்தில் அது சாத்தியம்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் குடும்பத்தில் 95 சதவீத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. - இதை நான் சொல்லவில்லை. முருக பக்தரான கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய பொன்மொழி.