நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 31, 2019

முதல் கோணல் - 2

பகுதி 2
(சென்ற 24–05–2019 இதழ் தொடர்ச்சி)
பிள்ளைகளுக்கு இத்தனை மணி நேரத்தில் அல்லது இத்தனை நாளில் மனப்பாடம் செய்து தேர்வில் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போதுதான் அலர்ஜியாகிவிடுகிறது. அதே சமயம், இயல்பான ஒன்றாக ஒரு விஷயத்தை கற்பிக்கும்போது எந்த நெருக்கடியும் இல்லாமல் சொந்த புத்தியுடன் தேறிவிடுகிறார்கள்.
அதைத்தான் குருநாதன் செய்து வந்தார். விளைவு, குமரவேல் பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பிடித்தான்.
அது மட்டுமின்றி, குமரவேலை ஏழாம் வகுப்பு முதலே செஞ்சிலுவைச் சங்க அமைப்பில் சேர்த்து சமூக சேவைக்கும் பழக்கப்படுத்தியிருந்தார்.
குமரவேலை பதினோராம் வகுப்பு படிக்கும்போது நாட்டு நலப்பணித்திட்டக்குழுவில் சேர்த்துக் கொண்டார் குருநாதன். அந்த ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து, திருவாரூர் மருத்துவக்கல்லூரி வளாகம், தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட, பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பயன்தரும் விதத்தில் மரக்கன்று நட்டு, தினமும் காலை 5.30 மணி முதல் ஏழு மணி வரை அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுதல், கிளைகளை கழித்தல், வேலிகளை சரி செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு வேலைகளை மாணவர்களைக் கொண்டே செய்து வந்தார்.
விளைவு, இரண்டாண்டுகளுக்குள் எல்லா மரங்களும் ஓரளவு குடைபரப்பி நிழல் தர ஆரம்பித்துவிட்டன. இந்த செயல்பாட்டை குருநாதன் மேற்கொள்ள முக்கிய காரணமே குமரவேல்தான்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நகரப்பேருந்துகள் நிறுத்தப்படுவதால் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைத்து தரப்பினர்களும் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை குருநாதன் ரத்த தானம் செய்ய சென்ற போது கம்பெனிக்காக குமரவேலும் சென்றிருந்தான். திரும்ப வரும்போது மன்னார்குடி சாலையில் ஒரு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல்லம் வழியாக சென்றார்கள்.
‘‘சார்... இங்க கலெக்டர் பங்களா ஏதோ பண்ணை வீடு மாதிரி சோலைக்குள்ள இருக்கு. ஆனா அவர் கார்ல போய்தான் வீட்டு வாசல்ல இறங்கப்போறாரு.
அங்க மெடிக்கல் காலேஜ்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் முடியாதவங்க வெயில்ல கருகி சாகணுமா... இதுக்கு ஏதாச்சும் செய்யணுமே சார்...’’ என்றான்.
அதைக் கேட்ட குருநாதன், ‘‘தம்பி... இதை குறை சொல்லி பெட்டிசன் எழுதுறதை விட, நாம ஒரு விசயம் செய்தால் யாருக்கும் சங்கடம் இல்லாம நல்ல தீர்வு கிடைக்கும்.’’ என்றார்.
‘‘சொல்லுங்க சார்... மனிதனால முடியுற விசயத்ததானே சொல்லப்போறீங்க. செஞ்சிடுவோம்...’’ என்று ஆர்வமானான் குமரவேல்.
‘‘மெடிக்கல் காலேஜ் டீன் கிட்ட பேசிட்டு, மரக்கன்று நடலாம். நட்டா மட்டும் போதாது. குறிப்பிட்ட காலம் வரை தினமும் தண்ணி ஊற்றி, வேலி, களை பராமரிப்பு கூட செய்ய வேண்டியது இருக்கும்...’’ என்றார் குருநாதன்.
குமரவேல் சம்மதிக்க, மற்ற மாணவர்களிடமும் பேசிவிட்டு, மருத்துவக்கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் என்று எல்லா அனுமதிகளையும் பெற்று தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த பணிகளை செய்தார் குருநாதன். சில நாட்கள்தான் கடந்திருக்கும். மருத்துவக்கல்லூரி பணியாளர்களில் சிலர், ‘‘பள்ளிக்கூட பசங்களே மத்தவங்களுக்காக இவ்வளவு செய்யுறாங்க. இதுல பலனடையப்போற நாங்களும் பங்ககெடுக்கலைன்னா நல்லா இருக்குமா. இனி நாங்க பார்த்துக்குறோம். நீங்க இது மாதிரி வேற இடங்களை பசுமையாக்குங்க...’’ என்றார்கள்.
குருநாதன் இதற்கு முழுமையாக சம்மதிக்கவில்லை. ‘‘அது நல்லா இருக்காது. நாங்க நட்ட மரக்கன்றுகள் கொஞ்சமாவது வளர்ந்து நிழல் கொடுக்குறதை பார்த்துட்டு அப்புறம் விலகுறோம். ஆனா நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்குறதையும் தடுக்க கூடாது. அப்போ வாரம் மூணு நாள் இங்க வந்து பராமரிக்கிறோம். மத்த நாள் வேற இடத்துல உருவாக்கி வளர்க்குறோம்’’ என்றார்.
மருத்துவமனை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் மரம் வளர்ப்பதை பார்த்து விட்டு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக வரும் நபர்களில் சிலரும் கூட இந்த பணியில் பங்கெடுத்தனர். நமக்கு நிழல் தரப்போற மரம் நல்லபடியா வளரணும்னு நினைச்சு சந்தோஷத்தோட பலரும் பணியில் ஈடுபட்டதாலோ என்னவோ இரண்டாண்டுகளில் அருமையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆக, இப்போது அனைவரும் மன நிம்மதியுடன் சங்கடமில்லாமல் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். மருத்துவக்கல்லூரி மாணவர்கள், சில மருத்துவர்கள் கூட வாக்கிங் செல்ல இப்போது வேறு இடம் தேடிப்போவதில்லை.
அவ்வப்போது குருநாதன் ஏற்பாடு செய்யும் ரத்த தான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குமரவேல் உதவிக்காக வருவான். அதனால் மருத்துவக்கல்லூரி டீன் முதல் பல மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் இப்போது குருநாதன் மட்டுமின்றி குமரவேல் உள்ளிட்ட சில மாணவர்களும் நன்கு தெரிந்த முகம்.
இதில் குமரவேலுடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலருக்கும், ராமசுப்பிரமணியனுக்கும் வேறு சில உறுத்தல்கள் இருந்தன.
பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களுமே நல்லவிதமான மதிப்பெண்களுடனேயே தேறி இருந்தார்கள். இதைப் பார்த்து அரசு பதினோறாம் வகுப்பு, பனிரெண்டாம் மாணவர்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தி, உணவு, உடை மட்டுமின்றி சத்தான ஆகாரங்கள் என்று கொடுத்து பயிற்சி அளிக்க சொன்னது.
தமிழகத்திலேயே பத்தாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்களை காட்டிய பள்ளி என்பதால் தமிழக முதல்வரே சிறப்பு கவனம் எடுத்து, கண்மூடித்தனமா ரூல்சை ஃபாலோ பண்ண வேண்டாம். இதுவரை கோச்சிங் கொடுத்த ஆசிரியர்கள், இப்போ இந்த மாணவர்களை எப்படி படிக்க வைக்கணுமோ அப்படி தயார் பண்ண சொல்லுங்க. காலம் காலமா இப்படித்தான். அதனால இனிமேலும் இப்படித்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. மாத்தி யோசிக்க சொல்லுங்க. அது சக்சஸ் ஆனா, மாநிலம் முழுவதும் மாற்றம் கொண்டு வர்றத பத்தி யோசிப்போம் என்று தெரிவித்து விட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் கூறினார்.
குருநாதனுக்கு இது பம்பர் பரிசு விழுந்ததைப் போல் இருந்தது. காலையில் 5 மணிக்கு எழுந்து ஏழு மணி வரை வாக்கிங், மரக் கன்றுகள் பராமரிப்பு, பிறகு குளியல், சிற்றுண்டி, பள்ளி வகுப்பு, மதிய உணவு முடிந்த பிறகு அரை மணி நேரம் ஓய்வு, அடுத்த அரை மணி நேரம் விளையாட்டு என்று முடித்துவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு வைத்து 3.30 மணியுடன் முடித்து விட சொன்னார்.
விடுதியில் மாலை நேரம் மீண்டும் ஒரு மணி நேரம் விளையாட்டு, பிறகு டீ, கடலை, சுண்டல் போன்று எதாவது சாப்பிட கொடுத்துவிட்டு இரண்டு மணி நேரம் படிப்பு. உடனடியாக இரவு உணவு. அதன் பிறகு, நாளிதழ், வார இதழ், கதைப்புத்தகங்கள் என்று எதை வேண்டுமானாலும் படித்துவிட்டு 9.30 மணிக்குள் தூங்கப் போய்விட வேண்டும். மீண்டும் 5.00 மணிக்கு விழிப்பு என்று பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டும் மாற்றிவிட்டார். இன்னொரு விசயம் சனி, ஞாயிறு என்றால் மாணவர்கள் வீட்டுக்கு சென்று விடலாம். இல்லை என்றால் கடைத்தெருவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பொது சேவைகளில் இந்த மாணவர்களை ஈடுபடுத்தினார். விளைவு மாணவர்களுக்கு படிப்பு என்ற ஒரே விசயத்தை மட்டும் பார்ப்பதினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் என்பது இல்லாமல் போய்விட்டது. படிப்பு என்பது திணிப்பாக இல்லாமல் இயல்பாக அவர்களுக்குள் நுழைந்தது.
இப்போது குமரவேலும் நிகில், விஜய், சுஷ்மிதாவைப் போல் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறான்.
***
சுந்தரமூர்த்தியை வேண்டா விருந்தாளியைப் போல் சியாமளாவும், லீலாவதியும் எண்ணி அவரை யாரும் வைத்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்துக்கு அனுப்பக்கூடிய அளவுக்கு பிரச்சனை அதிகரித்தது.
அப்போது குமரவேல் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் நடக்கும் பிரச்சனையை குருநாதனிடம் சொன்னான். அவர் மிக எளிமையாக சில விசயங்களை சொன்னார். அதே நேரம், ‘‘தம்பி குமரவேல்... இது எல்லா நேரத்துலயும் ஒர்க்அவுட் ஆகும்னு சொல்ல முடியாது. பார்த்துக்க...’’ என்றார்.
வீட்டுக்கு சென்ற குமரவேல், ‘‘அப்பா... ஒரு தந்தை பத்து குழந்தைகளை காப்பாத்துறான். ஆனால் பத்து குழந்தைகள் ஒரு தந்தையை காப்பாற்றுவதில்லைன்னு புக்ல போட்டுருக்கான்.
நம்ம வீட்டைப் பார்த்தா போதும். இதை ஏன் புக்ல பார்த்து தெரிஞ்சுக்கணும்... வயசானவங்க வீட்டுல இருந்தா அவங்க பல வெற்றி தோல்விகளை பார்த்து இருக்குறதால நல்லது கெட்டதை சொல்லுவாங்க.
அப்படி அவங்க சொல்றது இந்த காலத்துக்கு உதவாம தப்பா இருந்தா அதை பொறுமையா எடுத்து சொல்லிட்டு, நாம நம்ம வழியில போகலாம். என்னைப் பொறுத்தவரை தாத்தா இனிமே பெரியப்பா வீட்டுக்கும், இங்கயும் அலைய வேணாம். நம்ம கிட்டயே இருக்கட்டும்.... அவ்வளவுதான் சொல்லுவேன்.’’ என்றவன் சுந்தரமூர்த்தி பக்கம் திரும்பி,
‘‘தாத்தா... நீயும் திருத்திக்க வேண்டியது நிறைய இருக்கு. எனக்கு நல்ல புத்தி வர்ற மாதிரி நிறைய கதைகளை கொடுத்து படிக்க சொன்ன... நானும் எவ்வளவு நல்ல பிள்ளையா வளர்றேன். ஆனா அது எதையும் நீ படிக்கவே இல்லையா. அல்லது மறந்துட்டியா...
உனக்கு வயசாயிடுச்சு... அதனால வெளியில போகக்கூடாது. எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு யாராச்சும் சொன்னா நம்பாத. வெளியில வேலைக்கு போக வேணாம். ஆனா கடைக்கு போறது, ஈ.பி.பில் கட்டுறது மாதிரி சின்ன சின்ன வேலைகளை நீயே செய். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் டென்சன் குறையும்.
முக்கியமா, கழிவறைக்கு போனா சுத்தமா தண்ணி ஊத்திட்டு வா. இது கூட உன் மேல எரிச்சல் வர காரணமா இருக்கலாம். வயசாயிட்டா நாங்க அப்படித்தான் இருப்போம். நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்னு சொல்ற டயலாக்கை விடு.
எந்த வயசா இருந்தாலும் நல்ல விசயத்தை யார் சொன்னாலும் கேட்டுகிட்டு, ஈகோவை விட்டொழிச்சா எல்லாருமே சந்தோசமா இருக்கலாம்.’’ என்று குருநாதன் காட்டிய வழியில் குமரவேல் வீட்டில் வாதாடியது நல்ல பலனைத்தான் தந்தது.
இப்போது, சுந்தரமூர்த்தி முழுக்க முழுக்க ராமசுப்பிரமணியன் வீட்டில்தான் இருக்கிறார்.
***
மஸ்கட்டில் இருந்த ராமநாதன் திருவாரூர் புறநகர்ப்பகுதியில் வாங்கிப்போட்டிருந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து ஆறு மாதம் லீவு போட்டுவிட்டு இந்தியா வந்திருக்கிறான்.
இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கு அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு உண்டு, அல்லது இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கு கிடைக்கும் என்ற பல்வேறு தகவல்களால் குழம்பிப்போன மாணவர்கள், மாணவிகளில் விஜய், நிகில், சுஷ்மிதாவும் உண்டு.
குமரவேலைப் பொறுத்தவரை தெளிவாக இருந்தான். நுழைவுத்தேர்வுக்கெல்லாம் படித்து என்னை டென்சன் பண்ணிக்கப் போறதில்லை. எப்படியும் இந்த வருசம் தமிழகத்துல நுழைவுத்தேர்வுக்கு வாய்ப்பு இருக்காது. என் மார்க் அடிப்படையில மருத்துவக்கல்லூரியில இடம் கிடைச்சா படிப்பேன். இல்லன்னா இன்ஜினியரிங். எது படிச்சாலும் புரிஞ்சு படிச்சா டேலண்ட்டோட வெளியே வருவேன் என்று கூறிவிட்டான்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரம் என்பதால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று தனியார் பயிற்சி மையங்கள் தெரிவித்துவிட்டதால், விஜய், நிகில், சுஷ்மிதா ஆகியோர் ராமநாதன், மல்லிகாவுடன் திருவாரூர் வந்துவிட்டார்கள்.
ராமகிருஷ்ணனுக்கு லீவு இல்லை என்பதால் சியாமளா மட்டும் வந்திருந்தாள். தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவள் கோயம்புத்தூருக்கு ஓட்டு போட சென்று விடுவது என்று திட்டம்.
கடந்த மூன்று மாதங்களாகவே ராமநாதன் கட்டுமானப்பணிகளை கவனித்து வந்தான். பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் தரைதளமும், முதல்தளமும் கட்டுமானப்பணிகள் முடிந்து பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டாம். அது உடலுக்கு கேடு. சிமெண்ட் தொட்டியை கட்டலாம் என்று சுந்தரமூர்த்தி வற்புறுத்தியதால் தென்மேற்கு மூலையில் சிமெண்ட் தொட்டியை அமைத்தார்கள். அதன் வெளிப்புறத்தில் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.
***
மல்லிகா ஹாலில் வைத்து காய்கறிகளை அரிந்து கொண்டிருந்தாள். செல்போன் அழைப்பு சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தாள்.
கணவனிடமிருந்து அழைப்பு.
‘‘ஹலோ...’’
‘‘மல்லிகா... தண்ணி தொட்டியை பூசிகிட்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுடி.’’
‘‘என்னது... ஆக்சிடெண்டா?...அய்யய்யோ.... இப்ப நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?’’
‘‘கீழே விழுந்தவன் காம்பவுண்ட் கட்ட பில்லர் போட்டுகிட்டு இருந்தமே அந்த கம்பி மேல விழுந்துட்டான். வயித்துல குத்துன கம்பி முதுகு வழியா வெளியில வந்துட்டு... சைட்டுல வேலை பார்த்தவங்க எல்லாரும் அலறிகிட்டு இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலை’’
‘‘சரிங்க... உங்களுக்கு ஒண்ணுமில்லையே... ஜாக்கிரதையா இருங்க... அந்தாள் கூட வேலை பார்த்தவங்க ஏதாவது பிரச்சனை பண்ணிடப்போறாங்க... நீங்களா போய் எதுலயும் மாட்டிக்காதீங்க. ’’ என்ற மல்லிகாவுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.
‘‘விஜய், நிகிலை கிளம்பி இருக்க சொல்லு. அடிபட்டவனை எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு நான் சொல்றேன். அவங்க போய் பார்த்து நிலவரத்தை சொல்றாப்ல இருக்கும்...’’
‘‘என்னங்க பேசுறீங்க... நிகிலுக்கும், விஜய்க்கும் என்ன தெரியும்... படிக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாம் அலைய முடியுமா? இப்ப எழுதப்போற பரிட்சை இவனுங்களுக்கு மட்டுமில்லை... நம்மளோட கனவு, லட்சியம் எல்லாமே...’’
‘‘நிறுத்து மல்லிகா... நான் அடிபட்டவனை அழைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போனா பிரச்சனை பெரிசாகும்னு தோணுது. நம்ம பசங்களை இவங்களுக்கு தெரியாது. நான் பணம் ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்று சொல்லிட்டு கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம். எனக்கு இந்த மாதிரி சம்பவத்தை பார்த்ததுமே உதறுது.’’
‘‘சரிங்க... வர சொல்றேன்...’’ என்று போன் தொடர்பை துண்டித்தாள். மின் விசிறி முழு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் மல்லிகாவின் உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது.
‘‘அம்மா... அப்பாவுக்கு என்னாச்சு... என்ன ஆக்சிடெண்ட்... இப்ப எங்க இருக்காராம்?’’ என்று விஜய் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நிகில் பைக் சாவியுடன் வந்தான்.
போனில் நடந்த உரையாடலை மல்லிகா சொல்லவும்,
‘‘அம்மா... நீ போன்ல பேசினதை பார்த்துட்டு அப்பாதான் வண்டியை யார் மேலயாவது இடிச்சு ஆக்சிடெண்ட் பண்ணிட்டாருன்னு பயந்துட்டேன். நல்ல ஆளும்மா நீ...
வேலை செய்யுற ஆளு அவன் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். அவன் விழுந்து அடிபட்டதுக்கு நாம என்ன செய்ய முடியும். அப்பாவா அவனை புடிச்சு கீழே தள்ளிவிட்டார்?
எப்படியும் அவன் குடும்பம் நம்மகிட்ட பணம் வசூல் பண்ணாம விடாது. அப்புறம் ஏன் நாம ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு டென்ஷன் பண்ணிக்கணும். எத்தனை சினிமா, சீரியல்ல இது மாதிரி காட்டுறாங்க...
இப்படி அவதிப்படுறதுக்கு பதில் பேசாம, ஏதாவது அரசியல் பார்ட்டியை புடிச்சு நாம சரண்டராயிடுறது நல்லது. தொகையை குறைச்சு பேசிடுவாங்க. கமிஷனையும் அதுலயே எடுத்துக்க சொல்லிடலாம்...’’ என்று விஜய் கிரிமினலாக யோசனை சொல்லிக் கொண்டிருந்தான்.
மீண்டும் மல்லிகா வற்புறுத்தவே, சியாமளா குறுக்கிட்டு குமரவேலை அழைத்துக்கொள்ளும் யோசனையை கூறினாள்.
அதை சொல்லலாம் என்று மல்லிகா முயற்சித்தபோது சுந்தரமூர்த்தியின் ஆலோசனைப்படி குமரவேலை ராமநாதன் அழைத்துக் கொண்டிருந்தான்.
***
101க்கு போன் செய்த குமரவேல், தன் பெரியப்பா வீடு கட்டும் இடத்தின் முகவரியை தெளிவாக சொன்ன பிறகு, ‘‘சார்... பில்லர்ல இருந்த கம்பி ஒருத்தருக்கு முன்னால குத்தி பின்னால வந்துடுச்சாம். அவர் உடம்பைக் கூட அசைச்சுடாதீங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். நான் இப்பதான் ஸ்பாட்டுக்கு போய்கிட்டு இருக்கேன்.’’ என்று கூறினான். குருநாதன் மூலமாக ஏற்கனவே தீயணைப்புத்துறையினரின் அறிமுகம் இருந்ததும் இப்போது குமரவேலுக்கு உதவியது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு பணி துறையினர் கம்பி சூடேறாத வண்ணம் சில வழிமுறைகளை கையாண்டு அந்த ஆளை துளைத்திருந்த கம்பியை இரண்டடி நீளம் விட்டு அறுத்து எடுத்தனர். 108 ஆம்புலன்சும் தயாராக நின்றது.
காயமடைந்த ஆள் இன்னும் மயக்கமடையவில்லை.
அப்போது சைக்கிளில் அங்கு வந்த குமரவேல், காயமடைந்த நபரை நன்றாக பார்த்தான். ‘‘அண்ணே... உங்களுக்கு ஒண்ணும் இல்லை. உங்க டீ சர்ட்டோட சேர்த்துதான் கம்பி உள்ளாற போயிருக்கு. அதனால ரத்தம் போகலை. இதை விட பெரிய இரும்பு பட்டை உள்ளாற போன நபரையே டாக்டருங்க 15 நிமிசத்துல காப்பாத்திட்டாங்கன்னு பேஸ்புக்ல படிச்சிருக்கேன். ஆக உங்க வரலாறு கின்னஸ்ல எல்லாம் வராது’’ என்றான்.
அப்போது இன்னொரு கட்டிடத்தொழிலாளி, ‘‘அண்ணன் உயிர் பிழைப்பாரா மாட்டாரான்னு நாங்களே பயந்து போய் இருக்கோம். இப்ப காமெடி பண்ற நேரமா தம்பி இது...’’ என்று சூடானான்.
‘‘அவருக்கு ஏற்பட்ட காயம் ஒண்ணுமே இல்லை. சுத்தி இருக்குறவங்க பயமுறுத்துனாதான் உயிருக்கு ஆபத்து. அவருக்கு தைரியம் இருக்குறவரை பி.பி ஏறாது. உடம்புக்கு ஒண்ணும் ஆகாது.
சுத்தி இருக்குறவங்களை பத்தி கவலைப்படாதீங்கண்ணே... இப்ப மெடிக்கல் காலேஜ் போறோம்... கம்பியை க்ளீயர் பண்றோம். பட்டுன்னு குணமாகி வர்றோம்... மிச்ச வேலையை நீங்களே முடிச்சு, கிரஹப்பிரவேசத்தன்னைக்கு முதல் மரியாதையை நீங்கதான் ஏத்துக்குறீங்க...’’ என்று குமரவேல் சொன்னதும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவரை கவனமாக ஸ்டிரெச்சரில் பக்கவாட்டில் படுக்க வைத்து ஏற்றினார்கள்.
மீண்டும் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பு.
‘‘மெடிக்கல் காலேஜ் கொண்டு போகக்கூடாது. தனியார் ஆஸ்பத்திரிக்குதான் போகணும்.’’
‘‘புரியாம பேசாதீங்க. தனியார் ஆஸ்பத்திரியில இப்போ இவர் இருக்குற கண்டிசனுக்கு எந்த ஸ்பெசலிஸ்டை கூப்பிடறதுன்னு டிஸ்கஸ் பண்ணவே ரெண்டு மணி நேரம் ஆகும்.
ஆனா, மெடிக்கல் காலேஜ்ல அனுபவம் உள்ள புரொபசர்ல இருந்து பல ஸ்பெஷலிஸ்டும் இருப்பாங்க. அது தவிர சென்னை உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகள்ல இது மாதிரி கேஸ் அட்டன் பண்ணின டாக்டர்கள் கிட்ட போன்ல டிஸ்கஸ் பண்ணியே சீக்கிரம் இவரை காப்பாத்திடுவாங்க.
எங்க ஸ்கூல் வாத்தியார் மூலம் டாக்டர்கள் கிட்ட நேரடியாவே பழக்கம் இருக்கு... வேலையை அப்புறம் பார்த்துக்கலாம். பதட்டப்படாம எல்லாரும் மெடிக்கலுக்கு வந்துடுங்க. பெரியப்பா... நீங்களும்தான்....’’ என்ற குமரவேல், காயம்பட்டவருடன் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டான்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, குருநாதனுக்கு போன் செய்தான்.
‘‘தம்பி... நான் எலக்ஷனுக்காக டிரெய்னிங் கிளாஸ்ல இருக்கேன். டீன் கிட்ட இப்பவே பேசிடுறேன். அவருக்குதான் உன்னைய நல்லா தெரியுமே... அத்தோட உடனடியா என்ன பிளட் குரூப்னு பார்த்து நம்ம லிஸ்ட்டுல இருக்கறவங்களை கூப்பிட்டு பயன்படுத்திக்க.. ’’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்கள் தயாராக இருந்தனர்.
சிகிச்சை வெகு வேகமாக தொடங்கியது.
‘‘தம்பி... அவரை காப்பாத்துறது ஒண்ணும் பிரச்சனை இல்லை. சென்னை மெடிக்கல் காலேஜ்ல போன மாசம் இதை விட மோசமா இஞ்சுரி ஆன நபரையே நல்லபடியா காப்பாத்திட்டோம். வீடியோ கான்பரன்ஸ்ல அவங்களை கூப்பிட்டாச்சு. பி நெகட்டிவ் ரத்தம் ஸ்டாக் ரொம்ப கம்மியா இருக்கு. உங்க சார்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடுப்பா...’’ என்றார் ஒரு மருத்துவர்.
‘‘குமரவேல்... பிளட் கொடுக்குற ஆள் அட்ரஸ் சொல்லுங்க. நான் வேணுன்னா என் வண்டியில போய் அழைச்சிட்டு வர்றேன்... ’’ என்று முன்வந்தார் ஒரு செக்யூரிட்டி ஊழியர்.
‘‘லிஸ்ட் எங்க சார் வீட்டுல இருக்கு... இதோ சொல்றேன்...’’ என்றவன், குருநாதன் மனைவிக்கு போன் செய்தான்.
‘‘அம்மா... லிஸ்டுல பி நெகட்டிவ் இருக்கறவங்க அட்ரஸ் போன் நம்பர் சொல்றீங்களா இல்லன்னா, மாரிமுத்து, சுரேஷ் இந்த ரெண்டுபேர்ல யாரையாச்சும் அனுப்பவா...’’
‘‘அதெல்லாம் யாரையும் அனுப்ப வேணாம் தம்பி... உயிர் விஷயம்... இது கூட செய்ய மாட்டேனா... இரு.... நானே கட் பண்ணி கூப்பிடுறேன்... ’’ என்று ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் லைனில் வந்தார்.
ஆறு மருத்துவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் உள்ள நான்கு மருத்துவர்கள் என்று பத்துபேர் முயற்சி எடுத்து, வெற்றிகரமாக தொழிலாளி உடலில் துளைத்திருந்த கம்பியை அகற்றினார்கள்.
ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியில் வந்து தகவலை சொன்னதும் குமரவேல் தரையில் மண்டியிட்டு கையேந்தி, ‘‘இறைவா... இவரை காப்பாற்ற ஒத்துழைப்பு கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கணும். இனி ஒரு தொழிலாளிக்கு இது மாதிரி காயம் படக்கூடாது தெய்வமே... ’’ என்று மேலே பார்த்து சொன்னான்.
இவன் கண்ணீரைப் பார்த்து, சுற்றி இருந்த பலருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
ஒருவர், ‘‘தம்பி... இவர் யாருப்பா... உனக்கு சொந்தமா... ரொம்ப முயற்சி எடுத்திருக்கியே...’’ என்றார்.
‘‘சொந்தமோ இல்லையோ... இவரு உயிருக்கு மட்டுமில்லை... எந்த உயிருக்குமே விலையில்லை... சார்’’ என்றான். சுற்றி இருந்தவர்கள் இந்த பதிலில் விக்கித்து நின்றார்கள்.
***
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
அரசுப்பள்ளிகளில் படித்து மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியலில் குமரவேலின் பெயரும் இருந்தது. அதை விட ஒரு சிறப்பான விஷயமும் நடந்தது. ஆம்... இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை என்று அறிவிக்கப்பட்டதில், அரசுப்பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் மெரிட்டில் இடம் பிடித்தனர். அந்த பட்டியலிலும் குமரவேல் பெயர் இருந்தது.
(மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை)
குறுநாவல் நிறைவுற்றது.

No comments:

Post a Comment