இயற்பியல்
துறையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி, பணி நிறைவு செய்து ஓய்வு பெற்ற நாளில் கும்பகோணத்தில்
பிரபல ஹோட்டலில் பெரிய விருந்து கொடுத்தார் மகாபிரபு.
அடுத்த
நாள் காலையிலும் வழக்கமான நேரத்திலேயே எழுந்துவிட்ட மகாபிரபுவைப் பார்த்து அவரது மனைவி,
மகன், மருமகள், பேத்திகள் அனைவருக்குமே வியப்பு.
‘‘என்னங்க...
நாங்க எல்லாரும் வேலைக்கும், ஸ்கூலுக்கும் போற அவசரத்துல இருக்குறதால, இனிமேலாச்சும்
வீட்டு வேலைகள்ல உதவி செய்யலாம்னு எப்போதும் போலவே எழுந்துட்டீங்களா?’’ என்று சிரித்தாள்
புஷ்பலதா.
‘‘அதுதான்
உன் புத்திரன் எனக்கும் சேர்த்து பேத்திங்க ரெண்டு பேரையும் பள்ளிக்கு கிளம்ப தயார்
செஞ்சு உங்களுக்கு உதவி செய்யுறானே... அப்புறம் ஏன் என்கிட்ட இன்னும் எதிர்பார்க்குறீங்க...
இது ஓய்வெடுக்காத
சிங்கம்... நம்ம ஊரு பிரைவேட் காலேஜ்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டேன். மாசம் முப்பதாயிரம்
ரூபா சம்பளம். ஆக, என்னுடைய இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வர்ற பதினெட்டாம்
தேதிதான் கல்லூரிக்கு போகணும். அதுவரை தூங்கி பழகிட்டா மறுபடி வேலைக்கு போறப்போ சிரமமா
இருக்குமே... அதனாலதான் எப்போதும் போல காலையில் எழுந்து குளிச்சிட்டேன்.’’ என்றார்
கண்களில் பிரகாசத்துடன்.
‘‘இதுக்குமேல
நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை... வீட்டுல சும்மா உட்கார்ந்தா வீட்டு வேலை செய்ய சொல்லுவோம்னு
இப்படி ஒரு ஐடியா பண்ணி மறுபடி வேலைக்கு சேர்ந்துட்டீங்கிளா... நடத்துங்க... முப்பதாயிரம்
ரூபா வீட்டுல சும்மா உட்கார்ந்திருந்தா வருமா?’’ என்று சிரித்தபடி அடுத்த வேலைகளை பார்க்கச்
சென்று விட்டாள் புஷ்பலதா.
ஆனால் மகன்
விவேக், மருமகள் சிந்துஜா இதைப்பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
பேத்திகள்
பள்ளிக்கூடம் போய்விட, மனைவி, மகன், மருமகள் அவரவர் அலுவலகப் பணிகளுக்கு சென்றுவிட
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனியாக வீட்டில் இருந்தார் மகாபிரபு.
தனியாக
இருந்ததால் மனதில் பல வித எண்ணங்கள் அலைபாய்ந்தன. அவர் அரசுக்கல்லூரியில் பேராசிரியராக
பணியாற்றி நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். தற்போதைய அரசு விதிகளின்படி ஒய்வூதியமே ஒரு
லட்சத்தை நெருங்கும்.
புஷ்பலதா
நில அளவையர் அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கிறார். மகன் விவேக் தேசியமயமாக்கப்பட்ட
வங்கியில் பணியாற்ற, மருமகளும் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் பொறுப்பான பதவியில்
இருக்கிறார்.
பொருளாதாரத்தில்
மிகவும் செழிப்பான நிலையிலேயே மகாபிரபுவின் குடும்பம் இருந்தது. பென்ஷன் ஒரு லட்சத்தை
நெருங்கி வரப்போகுது. அப்புறம் ஏன் அப்பா காசு ஆசை பிடிச்சு அலையுறாருன்னு நினைக்கிறானா?
அல்லது,
அப்பா ஓய்வு பெற்று வீட்டுல இருந்தா, பேத்திங்களை பள்ளிக்கு கிளம்ப தயார் செய்யுற வேலையை
என்கிட்ட ஒப்படைக்க நினைச்சு, நான் தொடர்ந்து வேலைக்கு போனா அது முடியாதுன்னு கோபமா?
பணம் நிறைய
சம்பாதிச்சாலும் எவ்வளவு கோவிலுக்கு அபிஷேகம், அன்னதானத்துக்கு செலவழிக்கிறோம். கோவில்
கும்பாபிஷேகம், பள்ளிக்கூடத்துக்கு நிதி உதவின்னு யார் வந்தாலும் நான் பணம் கொடுக்காம
இருந்தது கிடையாது.
புஷ்பலதாவோட
சொந்தம், மருமக சிந்துஜாவின் சொந்தம்னு பலரும் ஏதாவது சூழ்நிலையில உதவின்னு வந்து நின்னப்ப
நானும் பண உதவி பண்ணியிருக்கேன். மனைவி, மகன், மருமகள் பண்ணுற உதவியையும் தடுக்குறது
கிடையாது.
இப்போ முப்பதாயிரம்
வாங்கினாலும் குறைந்தது 5 ஆயிரத்துல இருந்து பத்தாயிரம் வரைக்கும் தர்ம காரியத்துக்குதான்
போகப் போகுது.
பணம் கிடக்கட்டும்,
பேராசிரியரா இருந்த என்னோட அறிவை உடல் நலம் நல்லா இருக்கும்போதே முடக்கிப் போட்டு வீணடிக்க
விரும்பலை. சும்மா இருக்குற மனிதனின் மனது பேய்களின் கூடாரம்னு ஒரு பழமொழி இருக்கு.
என் மனசு ஆறா ஓடணும்... குட்டையா தேங்கினா நாளடைவில சாக்கடையா மாறி சுற்றுப்புறத்தை
கெடுக்கும்னுதானே உடனடியா வேலைக்கு போக முடிவெடுத்தேன்.
அது பிடிக்கலைன்னா
நேரடியா சொல்ல வேண்டியதுதானே... எதுவும் பேசாம போனா என்ன அர்த்தம்? அடச்சை... நான்
ஒரு மடையன்... காலையில எல்லாரும் வெளியில கிளம்புற அவசரத்துல இருந்ததால பேசியிருக்க
மாட்டாங்க... அது புரியாம தனியா கிடந்து புலம்பிகிட்டு இருக்கேன்.
சாயந்திரம்
எல்லோரும் வந்ததும், முக்கியமா பையன் கிட்டயும், மருமகள் கிட்டயும் ஆட்சேபனை இருக்கா,
இல்லன்னா நேரமில்லாம எதுவும் சொல்லாம போனீங்கிளான்னு கேட்டுடணும்.
நேரமில்லைன்னா
என்னா, நல்ல முடிவுப்பா... அப்படி இப்படின்னு எதாவது சொல்ல வேண்டியதுதானே... என்று
பலவாறு குழம்பித் தவித்தார் மகாபிரபு.
ஸஸஸ
அன்று இரவு
உணவுக்குப் பின், மகாபிரபு நேரடியாகவே மகன், மருமகளிடம் கேட்டுவிட்டார். அப்படியும்
இதைப்பற்றி எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தார்கள் அவர்கள்.
‘‘உங்க
மனசுல ஏதோ இருக்கு... அதனாலதான் மென்னு முழுங்குறீங்க... தயவு பண்ணி என்னன்னு சொல்லுங்க’’
என்றும் கேட்டுப்பார்த்தார் மகாபிரபு.
அதற்கும்
அவர்கள் இருவரும் மவுனம் சாதித்தார்கள்.
‘‘இதுக்குத்தான்
நான் வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தது. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து படிப்பு,
வேலைன்னு ஐம்பது வருஷத்துக்கும் மேல பரபரப்பாவே இருந்துட்டேன். உடம்பு சரியில்லாம,
ஏதாவது விசேஷத்தப்ப வேலைக்கு போகாம இருந்துருக்கேன். ஆனா, இனி இனி வேலை கிடையாதுன்னு
நேத்தோட ஓய்வு கொடுத்துட்டாங்க. இன்னும் பதினேழு நாள்ல மறுபடி வேலைக்கு போகப்போறேன்னு
நல்லா தெரியுது. அப்படி இருந்தும், இன்னைய ஒரு நாள் பொழுது அவ்வளவு மெதுவா நகர்ந்துச்சு.
நீங்க எல்லாரும்
உங்க வேலை, பள்ளிக்கூடம்னு பிசியாவே இருப்பீங்க. ஆனா இனி நான் எப்பவுமே வேலைக்கு போகாம
வீட்டுல உட்கார்ந்தா என்கிட்ட யார் பேசிகிட்டு இருப்பா, டி.வி, புத்தகத்தை எவ்வளவு
நேரம்தான் பார்க்க படிக்க முடியும்?
வீட்டுல
நீங்க எல்லாரும் இருக்குற நேரம் கூட என்கிட்ட பேசலைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சுடாது?...
அதுக்காகத்தான் வேலைக்கு போறேன்னு சத்தியம் பண்ணணுமா? நான் ஒண்ணும் காசு ஆசை பிடிச்சு
வேலைக்கு போகலைன்னு என்ன செஞ்சா நம்புவீங்க?... அந்த பிரைவேட் காலேஜ்ல பி.ஹெச்.டி படிச்சவங்களுக்கே
இருபத்தஞ்சாயிரம்தான் சம்பளம்.
நெட், ஸ்லெட்,
எம்.ஃபில் அப்படின்னு எந்த கூடுதல் தகுதியும் இல்லாம போனா பத்தாயிரம்தான் சம்பளம்.
என்னுடைய அனுபவத்தை மதிச்சு என் திறமைக்காக முப்பதாயிரம் சம்பளம் தர்றாங்க. அதை வேணுன்னா
அப்படியே கோவில் உண்டியல்ல போட்டுட்டா நம்புவீங்கிளா?’’ என்று படபடத்தார் மகாபிரபு.
‘‘நானும்
காலையிலேயே கவனிச்சேன்... இப்ப எதை மனசுல வெச்சிகிட்டு ரெண்டு பேரும் வாயடைச்சு போய்
அவரை டென்ஷனாக்குறீங்க?... காலையில வேலைக்குப் போற அவசரத்துல இருந்ததால என்னால எதையும்
கேட்க முடியலை...
இப்போ எனக்கு
உண்மை தெரிஞ்சாகணும்...’’ என்று புஷ்பலதாவும் கட்டளையிட்டாள்.
‘‘அப்பா...
நீங்க பிறந்து வளர்ந்த ஊரு சிமிழி. நம்ம கும்பகோணத்துல இருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர்தான்.
அங்கதான் நீங்க பத்தாம் வகுப்பு வரை படிச்சீங்க... இன்னைக்கு நீங்க பெரிய இயற்பியல் பேராசிரியரா பணியாற்றி
ஓய்வு பெற்றிருக்கலாம்.
அதுக்கெல்லாம்
அடித்தளம் நீங்க பிறந்து வளர்ந்த சிமிழி கிராமமும், அந்த உயர்நிலை பள்ளிக்கூடமும்தான்னு
நினைவு இருக்காப்பா...’’ என்றான் விவேக்.
‘‘என்ன,
விளையாடுறியா? நினைவில்லாமத்தான் வருஷா வருஷம் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தேனா? கோவிலை
எடுத்துக் கட்ட பத்து லட்சம் கொடுத்தேனா, வருஷம் தவறாம திருவிழாவுக்கு உங்க எல்லாரையும்
அழைச்சுகிட்டு போனேனா? பள்ளிக்கூடத்தை பராமரிக்க அப்பப்போ நன்கொடை கொடுத்தேனா...’’
என்று மகாபிரபு பேசும்போது அவரது கண்கள் சிவந்திருந்தது.
‘‘அதெல்லாம்
சரிதாம்பா... சரியான, நியாயமான முறையில செயல்திட்டத்தோட முயற்சி செய்து அணுகினா பணம்
கொடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா அங்கே இருந்து சேவை செய்ய, அதாவது உங்களை மாதிரி
ஜீனியஸ் தங்களுடைய அறிவை நன்கொடையா தர்றதுக்கு பஞ்சம்தானேப்பா...
இப்போ பாருங்க...
உங்களுக்கு தொண்ணூறாயிரத்துக்கு குறையாம ஓய்வூதியம் கிடைக்கும். நீங்க கூட ஓய்வுக்காலத்துல
உடல்நிலை ஒத்துழைக்கிற வரை நம்ம கிராமத்துக்கு போய் பசங்களை மேம்படுத்த உங்க அறிவை
பயன்படுத்த நினைக்கலை...
முப்பதாயிரம்
ரூபாய் சம்பளத்தை அப்படியே உண்டியல்ல போட்டுடறேன்னு சொல்றீங்கிளே... பணமா கொடுக்குற
தர்மமும் அவசியம்தான். அதையும் தாண்டி ஒருத்தன் அந்த பணத்தை தானே சம்பாதிக்க வழி ஏற்படுத்திக்
கொடுக்குறதுதான் ஆக சிறந்த தர்மம்.
காலையில
நீங்க, மறுபடி வேலைக்கு சேர்ந்துருக்குற விஷயத்தை சொன்னதும் சமீபத்துல இணையத்துல ஒரு
விஷயம் படிச்சதும், இப்போ நீங்க செஞ்சிருக்குறதையும் இணைச்சுதான் நினைவுக்கு வந்தது.
ஒரு மாந்தோப்பு
முழுசும் பழம் காய்த்து பழுத்து தொங்குது. ரெண்டு பழம் பறிச்சு சாப்பிட்டதும் நம்ம
பசி அடங்கிடும். அடுத்த தோப்பு வரை நமக்கு தேவைப்படும்னு நினைச்சா மேல ரெண்டு பழம்
பறிச்சு எடுத்துகிட்டு பயணத்தை தொடரலாம்.
அதை விட்டுட்டு,
மரத்தை பூராவும் நானே மொட்டையடிச்சு எல்லா பழத்தையும் பறிச்சுக்குவேன். அடுத்ததா பசின்னு
வர்றவங்களுக்கெல்லாம் நான் தானமா கொடுப்பேன்னு சொல்றது நியாயமே இல்லை.
ஏன்னா நம்ம
கையில அப்படி நூறு பழம் இருந்தா, எல்லாத்தையும் சாப்பிட முடியாது. நாலை தானம் கொடுப்போம்.
நாற்பது வீணாகி ஒண்ணுத்துக்கும் உதவாம போயிடும். எல்லாத்தையும் அப்பவே தூக்கி கொடுக்க
நாம ஒண்ணும் கர்ணன் இல்லை. இன்னும் என்னென்னவோ தீமைகளும் ஏற்படும்னு போட்டுருந்துச்சு.
அதோட இன்னொரு
விஷயம் என்ன தோணுச்சுன்னா, நீங்க முப்பதாயிரம் சம்பளம் வாங்கி தான தர்மம் பண்ணுவேன்னு
சொல்றீங்க.
அதே சமயம்
நீங்க அந்த வேலைக்கு போகலைன்னா, யாரோ ஒருத்தருக்கு அந்த வேலை கிடைக்கும். அவனுக்கு
கல்லூரி நிர்வாகம் பத்தாயிரமோ, பதினஞ்சாயிரமோ சம்பளம் கொடுத்தாலும் அதை வெச்சு அவன்
சக்திக்கு தகுந்த மாதிரி குடும்பத்தை காப்பாத்துவான்.
ஆனா நீங்க அதே பத்தாயிரத்தை அவனுக்கு தானமா கொடுக்குறது
சாத்தியமாகுமா?... இப்ப சொல்லுங்கப்பா... நீங்க வேலைக்கு போறது நியாயமா? அல்லது நம்ம
கிராமத்து பள்ளிக்கூடத்துல மாணவர்களுக்கு வழிகாட்டுறது நியாயமா?...’’ என்று நிறுத்தினான்
விவேக்.
அப்பனுக்கு
பாடம் சொன்ன சுப்பன்னு படிச்சிருக்கேன்... இப்போ நேரடியா பார்க்குறேன்... நானா செஞ்சிருக்க
வேண்டிய காரியத்தை உணர்த்துனதுக்கு நன்றிப்பா...’’ என்றார் மகாபிரபு.
(06.01.2019
வாரமலர் இதழ் – சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை பதிப்புகள்)
No comments:
Post a Comment